
இந்தோனேசியாவில் ‘கெஹெல்பத்தார பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ உள்ளிட்ட முக்கிய 6 பாதாள உலகக்குழுவினர் கைது !
இலங்கையை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சாலிந்த’, ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘நிலங்க’ உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினர்கள் 6 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட ‘கெஹெல்பத்தார பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகிய முக்கிய நபர்கள் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இந்த ஆறு பேரும், இந்தோனேசியாவின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரதான குற்றவாளியான கெஹெல்பத்தார பத்மே, மலேசியாவிலிருந்து தப்பிச் சென்று ஜகார்த்தாவில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் இந்தோனேசிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆறு பேர் மீதும் கொலை, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட பல தீவிர குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

