
இலஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதகல் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித்திணைக்கள அதிகாரிகள் நேற்று (30) முயற்சித்தனர். பின்னர் அவரை கைது செய்யாமல் விடுவதற்காக 30 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர்.
இந்நிலையில் போதைப் பொருளை வைத்திருந்தவர் 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்குவதாக ஒத்துக் கொண்ட நிலையில் அவர்கள் சந்தேக நபரை விட்டுவிட்டு இலஞ்சப்பணத்தினை சித்தங்கேணி பகுதியில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
போதைப்பொருள் வைத்திருந்தவரின் தரப்பினர் இதுகுறித்து காங்கேசன்துறை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதையடுத்து அங்கு இலஞ்சத்தை கொடுப்பதற்கு முயற்சித்தவேளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மூவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

