
சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை பௌஸ்மாவத்தை வீதி – மலையார் வீதி சந்திக்கும் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரைச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து ஒரு கிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கை, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பி. இஹலகே தலைமையிலான அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

