
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடையவர் எனவும், அவர் ஒரு இரவு விடுதியில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றி வருபவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஓமான் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 8 பார்சல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோகிராம் 220 கிராம் குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 8 கோடியே 22 இலட்சம் ரூபாய் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விமானப் பயணியையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

