
போதை மாத்திரைகளுடன்ஒருவர் கைது
கொழும்பு பாலத்துறை பகுதியில் 21,000 போதை மாத்திரைகளுடன் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் நேற்று (19) மாலை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் சந்தைப் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனைக்குச் சென்றபோது, பாலத்துறை பகுதியில் உள்ள வீட்டிற்கு போதை மாத்திரைகளுடன் ஒருவர் வரவுள்ளதாகத் தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பதுங்கியிருந்து கண்காணித்த பொலிஸ் அதிகாரிகள், சந்தேகநபரை மாத்திரை தொகுதியுடன் கைது செய்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின் போது, குறித்த மாத்திரைகள் பல்வேறு நபர்களுக்கு மொத்தமாக விநியோகிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

