மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

(203 அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2463/04ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சாரதி உரிமை அறவீடு தொடர்பான ஒழுங்குவிதியை திருத்துவதற்கும், 2467/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடி காலத்தை தற்காலிகமாக நீடித்தல் தொடர்பான ஒழுங்குவிதி என்பவற்றுக்கு குழு அனுமதி வழங்கியது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கூடியபோதே இந்த ஒழுங்குவிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான (வைத்தியர்) பிரசன்ன குணசேன மற்றும் எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

போக்குவரத்துத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட இரு உபகுழுக்களின் அறிக்கைகள் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.

முறைசாரா போக்குவரத்துத் துறை சார்ந்த பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எச்.எம்.தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்கள், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைத்தார்.

தனியார் பேருந்துச் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மின்னணு செயலிப் பயன்பாட்டின் வாயிலாக போக்குவரத்துத் துறையில் ஈடுபடுபவர்கள் (App Base Workers), ஆகியோருக்கான ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல் போன்ற விடயங்கள் குறித்த பரிந்துரைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய இதர சேவைகளை உருவாக்குவதற்கான வணிக மாதிரிகளை (Business Models) உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைத்தார்.

உப குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆராய்ந்து அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்படும் என அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய குறைபாடுகள் குறித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )