
இஸ்ரேல் சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேலுக்கு சென்றடைந்துள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்த உள்ளார்.
மேலும், இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட்டில் (Knesset) பிரதமர் மோடி உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
இந்தியா–இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயணம், காசா பகுதியில் நடைபெற்று வரும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி சூழ்நிலையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
காசா பகுதியில் இடம்பெற்று வரும் போர் நடவடிக்கைகளில் இதுவரை குறைந்தது 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பிராந்திய அமைதி, மனிதாபிமான உதவி மற்றும் மத்திய கிழக்கு நிலவரம் உள்ளிட்ட விவகாரங்களும் இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

