
சட்டவிரோத தேக்கமரக் குற்றிகள் கடத்தல் ; ஒருவர் கைது
வன்னி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக தேக்கமரக் குற்றிகளை ஏற்றிவந்த பாரவூர்தி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ம. கோணேஸ்வரன் தலைமையில் இயங்கும் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இந்த பாரவூர்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த பாரவூர்தியை பொலிஸார் பின்தொடர்ந்து சென்று, மீசாலை பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் மரக்குற்றிகளை இறக்கத் தயாராக இருந்த வேளையில் பாரவூர்தி கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 52 தேக்கமரக் குற்றிகள் பாரவூர்தியில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பாரவூர்தி நீண்ட காலமாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் சாவகச்சேரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதீபன்

