
ஏப்ரலுக்கான எரிபொருள் இறக்குமதி உறுதி ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் கொள்வனவு கட்டளைகளும் நேற்று (18) உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 5 எரிபொருள் கப்பல்களுக்கான கட்டளைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் இயக்குனர் மயூர நெத்திகுமரகே குறிப்பிட்டார்.
மேலும், QR குறியீட்டு முறைமையில் உள்நுழைந்து அதை புதுப்பிப்பதன் மூலம், ஒருவர் தமக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை சரிபார்க்க முடியும் என்றும், முன்பு எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பாக இருந்த சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“முன்னதாக ஏப்ரல் மாத இறுதி வரை மட்டுமே எரிபொருள் இருப்பு இருப்பதாக உறுதி செய்திருந்தோம்.
ஆனால் தற்போது, கப்பல்கள் நான்காவது மாதம் வரை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அடுத்த மாத இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனவே, எரிபொருள் பற்றாக்குறை குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை,” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், QR குறியீட்டை உருவாக்குவதில் தற்போது எந்த தொழில்நுட்பப் பிழையும் இல்லை என்றும், ஒரே கைபேசி எண் மற்றும் ஒரே அடையாள எண்ணின் கீழ் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

