
கொத்தல்லிம்புடு தாவர தொகையை இலங்கையிலிருந்து கடத்த முயன்ற வெளிநாட்டு நபர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்இன்று காலை பாதுகாக்கப்பட்ட தாவர இனமான கொத்தல்லிம்புடு (Kotala Himbutu) தொகையை நாட்டிற்கு வெளியே கடத்த முயன்ற வெளிநாட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இலங்கைக்கு வருகை தந்திருந்த 46 வயதுடைய சீனப் பிரஜை ஆவார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
சந்தேக நபர் தனது பயணப் பொதிகளில் சுமார் 21 கிலோகிராம்கொத்தல்லிம்புடுவை மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக, இவை துண்டுகளாக வெட்டப்பட்டு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் பிரபல தேயிலை வர்த்தக முத்திரையிடப்பட்ட பொதிகளில் அடைக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் (Fauna and Flora Protection Ordinance) கொத்தல்லிம்புடு பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும், மேலும் இதனை ஏற்றுமதி செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமை பாதுகாப்பு பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

