
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது
பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதல் நிலைமைகளால் தேசிய மட்டத்தில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை பொதுமக்களுக்கு தெரிந்திருந்தாலும், எதிர்க்கட்சிகள் அதனை பொருட்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, கோதுமை மா உள்ளிட்ட இனிப்பு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பண்டிகைக் காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபை தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மூலம் விலைக் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

