3 தசாப்தங்களுக்குப் பின்னர்               லெபனான் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மேசைக்கு – போர் முடிவுக்கு வருமா ?

3 தசாப்தங்களுக்குப் பின்னர் லெபனான் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மேசைக்கு – போர் முடிவுக்கு வருமா ?

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதிக்கு பின்னர், லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான முதலாவது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்றுள்ளன.

இதற்கு மத்தியஸ்தம் வகித்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, ஹிஸ்புல்லா அமைப்பின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவைக் குறிப்பிட்டு, அரச சார்பற்ற அனைத்து பயங்கரவாதக் குழுக்களையும் நிராயுதபாணியாக்க விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உடனடி போர்நிறுத்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை லெபனான் கோரியுள்ளது.

“இது ஒரு நீண்ட செயல்முறை, இதற்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால் இந்த முயற்சி பெறுமதிமிக்கது என்று நாங்கள் நம்புகிறோம்.” என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளனர்.

“லெபனான் மக்களின், குறிப்பாக தெற்கு பகுதி மக்களின் துயரங்களுக்கு இது ஒரு முடிவின் தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். லெபனான் ஆயுதப் படைகள் மட்டுமே பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பதே இதற்கு ஒரே தீர்வாகும்.” என
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த இராஜதந்திர நகர்வுகளை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது. “வொஷிங்டனில் அவர்கள் எட்டுகின்ற எந்தவொரு உடன்படிக்கைக்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம்” என ஹிஸ்புல்லா அரசியல் பேரவையின் உறுப்பினர் வாபிக் சபா தெரிவித்துள்ளார்.

லெபனான் அரசாங்கம் ஹிஸ்புல்லாவை எதிர்கொள்ளும் திறன் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த தனிப்பயன்பாட்டு பேச்சுவார்த்தைகளில், எந்தவொரு போர்நிறுத்தத்திலும் லெபனானும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்திய போதிலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதனை நிராகரித்துள்ளன.

லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் இதற்கு முன்னர் 1993 ஆம் ஆண்டிலேயே பேணப்பட்டிருந்தன.

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே மோதல்கள் வெடித்தன.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சுமார் 6,500 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )