
‘அமைதிக்கான நடைப்பயணம்’ ; ஜனாதிபதி முழு ஆதரவு
இலங்கையில் இன்று (21) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் ‘அமைதிக்கான நடைப்பயணம்’ நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது X கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில்,
“அனைத்து மக்களிடையேயும் பகுத்தறிவு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று தொடங்கும் ‘அமைதி நடைப்பயணத்தை’ ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: “இந்த புனித நடைப்பயணம் தம்புள்ளையில் தொடங்கி, புனிதப் பொருட்களை சுமந்துகொண்டு தீவு முழுவதும் பயணிக்கும் வேளையில், நமது பாரம்பரியத்தை உள்ளடக்கிய அமைதி மற்றும் கருணை ஆகிய நித்திய விழுமியங்களை மீண்டும் சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் அழைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, உலக சமூகத்திற்கு அமைதியின் ஆழமான செய்தியை எடுத்துரைக்கும் இந்த ஆன்மீக நிகழ்ச்சி வெற்றியடையும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்க வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பாஞ்சகரா தேரர் தலைமையிலான ஏழு முன்னணி பிக்குகள் இன்று காலை தீவிற்கு வந்தடைந்துள்ளனர். அதேபோல், சமாதானப் பேரணிக்காக “அலோகா” எனப்படும் நாயும் பாதுகாப்பாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘சமாதானத்திற்கான நடை’ நிகழ்ச்சி, அரசாங்கத்தின் ஆதரவுடன் இன்று முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெறப்பட்ட புனித போதி மொட்டுடன் பன்னகர தேரர் இந்தப் பயணத்தில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

