
3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது – சிலர் தப்பியோட்டம்
துபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ரூபா 3,86,70,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் (E-cigarettes) ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வர்த்தகருடன் மேலும் ஒரு குழுவினர் வந்துள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டதைக் கண்டவுடன், ஏனையவர்கள் தங்களது பயணப் பொதிகளை அங்கேயே கைவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று (25) அதிகாலை துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் .
சந்தேகநபர் கொண்டு வந்த 16 பயணப் பொதிகளில் இருந்து, ‘மென்செஸ்டர்’ (Manchester) ரகத்தைச் சேர்ந்த 2,29,800 சிகரெட்டுகள் (1,149 கார்டன்கள்) மற்றும் 113 மின்னணு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்ட்டுள்ளன .
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் தப்பியோடியவர்கள் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

