
ஹட்டன் பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 34 பேரில் ஒருவர் உயிரிழப்பு
ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின், பாடல்யால பகுதியில் இன்று (29) பிற்பகல் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த போது பஸ்ஸில் சுமார் 40 பயணிகள் இருந்துள்ளனர். அவர்களில் சாரதி உட்பட 34 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் 17 ஆண்கள், 14 பெண்கள், ஒரு 12 வயது சிறுவன் மற்றும் ஒரு 4 வயது சிறுமி ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் இருந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான பஸ், எதிரே வந்த மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முயன்ற போது, வீதியை விட்டு விலகி சுமார் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

