
விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும்
கிரிக்கெட் சபையும் அரசாங்கமும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ”கொவிட் தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பினால் வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் தேவைகளுக்கு அமைவாக வரிக் கொள்கை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு கடந்த அரசாங்கங்கள் அனைத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கு பல்வேறு வழியில் நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளன. ஆகவே, தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது” என தெரிவித்துள்ளார்.