
பொதுத்தேர்தலின் போது எமக்கு வாக்களிக்காதவர்கள் கூட இம்முறை வழங்குவார்கள்
வடக்கு, கிழக்கு மக்களின் மனநிலை மாறாது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியையே அவர்கள் ஆதரிப்பார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெற முடியுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,
”பொதுத்தேர்தலின் போது 22 தேர்தல் மாவட்டங்களில் 21 இல் நாம் வெற்றிபெற்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே முதலிடத்தை பிடிக்க முடியாமல்போனது. யாழ்.மாவட்டம் உட்பட வடக்கில் வெற்றிபெற்றோம்.
கடந்த பொதுத்தேர்தலின் போது எமக்கு வாக்களித்துவிட்டு, இம்முறை மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவருகின்றோம். எனவே, பொதுத்தேர்தலின் போது எமக்கு வாக்களிக்காதவர்கள் கூட இம்முறை வழங்குவார்கள். சிறப்பான அணியை களமிறக்கியுள்ளோம்.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து சபைகளுக்கும் நாம் போட்டியிட முடியாத சூழ்நிலை காணப்பட்டது. இம்முறை அனைத்து சபைகளுக்கும் போட்டியிடுகின்றோம். இதுகூட ஆரம்பக்கட்ட வெற்றியே” என தெரிவித்துள்ளார்.