அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை

அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விருப்பு வாக்குகளை பதிவிடுவது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர், கடந்த இரண்டு தேர்தல்களிலும் அரசாங்கம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதனை தெளிவாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கொள்கைப் பிரகடனத்தில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியலில் பிரகடனப்படுத்தப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் என இரு அம்சங்கள் காணப்படுகின்றன.

பிரகடனப்படுத்தப்படுவதற்கும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் இடைவெளியை விட்டுவிடாமல் சொன்னதை செய்வது சிறந்த அரசாங்கமொன்றின் குறிகாட்டியாகும்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் சுபீட்சமான நாட்டையும் அழகிய வாழ்க்கையையும் நாட்டு மக்களுக்கு பெற்றுத் தருவோம் என கூறிய தரப்பினரின் வாக்குறுதிகளை நம்பி சுப நேரத்தில் அநுரவிடம் நாட்டை மக்கள் ஒப்படைத்தனர்.

ஆனால் அரசாங்கம் வாக்குறுதியளித்த எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரிசி, பால் மா, தேங்காய் ஆகியவற்றின் விலைகளை குறைப்பதாக உறுதியளித்த போதும், பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைக் கூட வழங்க முடியாத அரசாங்கம் இன்று ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது.

தாம் முன்வைக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டத்திலயே 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவோம் என இந்த அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதியும் இன்று மீறப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாவனல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )