அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை  உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்படும்

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்படும்

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கையைத் தயாரித்து, எதிர்வரும் 13ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.

ஒட்டுமொத்த அரச சேவையினையும் மீளாய்வு செய்து அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பு ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தலைமையில் 2025.11.10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுவின் தலைவர், இவ்வாறு அரச சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றதாகவும், அதன்போது அவர்களின் சேவைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவான புரிதலைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய, ஒட்டுமொத்த அரச சேவையிலும் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக மிகவும் முறையான மற்றும் விஞ்ஞான ரீதியிலான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், அவர்களின் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்காக சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போதுள்ள நிலைமைகளை மிகவும் நியாயமான முறையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிப்பதாக உப குழுவின் தலைவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜந்த கம்மெத்தகே, (சட்டத்தரணி) கீதா ஹேரத் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )