
வத்தளையில் பாவனைக்கு பொருத்தமற்ற காய்ந்த மிளகாய் களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டது
வத்தளை களஞ்சியசாலை ஒன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளது,
குறித்த களஞ்சியசாலையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக சந்தேகிக்கப்படும் காய்ந்த மிளகாய் சேமித்து வைக்கப்பட்டிருந்தது
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக சந்தேகிக்கப்படும் காய்ந்த மிளகாய் களஞ்சியசாலையொன்றில் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த முறைபாட்டைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவு இந்த சோதனையை நடத்தியது.
வத்தளையின் எலகந்த பகுதியில் அமைந்துள்ள குறித்த களஞ்சியசாலை சோதனை செய்யப்பட்டபோது அங்கு, 25 கிலோகிராம் கொண்ட மிளகாய், 30 பைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
மேலும் உற்பத்தி திகதி , காலாவதி திகதி மற்றும் எடை போன்ற அத்தியாவசிய தகவல்கள் அந்த பொதிகளில் குறிப்பிடப்படவில்லை என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த காய்ந்த மிளகாய்த் தொகை சந்தைக்கு வெளியிடப்பட தயாராக வைக்கப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக களஞ்சியசாலை உரிமையாளர் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

