
37,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் மார்ச் 25 இல் இலங்கை வருகிறது
எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் இல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் அவர் , மார்ச் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், உலக சந்தையில் நிலவும் விலை உயர்வு அதிலும் பிரதிபலித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மேலும் ஒரு கப்பல் வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் தற்போதும் பாரிய நட்டத்துடனேயே செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்விற்குப் பிறகும், ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ.100 மற்றும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு ரூ.20 அளவில் அரசாங்கம் தானே சுமையை ஏற்றுக்கொள்கிறது என்றும், இதற்காக மாதந்தோறும் சுமார் ரூ.20 பில்லியன் செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

