
எங்களது நம்பிக்கையை அவர்கள் சம்பாதிக்கப் போகிறார்களா இல்லையா என்பதை அவர்களே இனி தீர்மானிக்க வேண்டும் -ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல விவகாரங்களில் ஒருவிதப் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.
எனினும், இரண்டு அல்லது மூன்று மிக முக்கியமான விஷயங்களில் இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய ஊடகங்களிடம் பேசிய பகாவி பேச்சுவார்த்தை குறித்து விளக்கினார்,
40 நாட்கள் திணிக்கப்பட்ட போருக்குப் பிறகு இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. எனவே, இரு தரப்புக்கும் இடையே நிலவும் அவிசுவாசம் மற்றும் சந்தேகங்களுக்கு மத்தியில் ஒரு உடன்பாட்டை எட்டுவது சவாலானது.
“ஒரே ஒரு சந்திப்பிலேயே முழுமையான உடன்பாடு எட்டப்படும் என்று யாரும் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்க்கவில்லை. அது இயற்கையானதுதான்,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி (Esmaeil Baghaei) கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் வெற்றி என்பது ஈரானின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை ஏற்றுக்கொள்வதிலும், அமெரிக்காவின் தீவிரத்தன்மை மற்றும் நன்மதிப்பைப் பொறுத்துமே அமையும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஈரானின் இந்த விளக்கம் அமைந்துள்ளது.
இதேவேளை இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையின் போது ஈரானியக் குழு மிகவும் “முன்னோக்கிச் செல்லும்” வகையிலான ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை முன்வைத்ததாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.
இன்று காலை உடன்பாடு ஏதுமின்றி பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், அமெரிக்கத் தரப்பு ஈரானியக் குழுவின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காலிபாஃப் தனது ‘X’ சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டதாவது,
ஈரானின் தர்க்கத்தையும்கொள்கைகளையும் அமெரிக்கா தற்போது புரிந்து கொண்டுள்ளது. எங்களது நம்பிக்கையை அவர்கள் சம்பாதிக்கப் போகிறார்களா இல்லையா என்பதை அவர்களே இனி தீர்மானிக்க வேண்டும். அதற்கான நேரம் இதுதான்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஈரானியக் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் காலிபாஃபும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அறிக்கை, அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்பதற்கு ஈரான் இன்னும் தயாராக இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

