
நாட்டின் சகல வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் மக்கள் சேவையில் – வைத்தியர் சமில் விஜேசிங்க
நாட்டின் சகல வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் புத்தாண்டு காலத்தில் பட்டாசு மற்றும் வாணவேடிக்கை செயற்பாடுகளில் ஈடுபடும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், குறிப்பாக சிறுவர்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும், மதுபோதையில் எக்காரணம் கொண்டும் வாகனம் ஓட்ட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
அதிக சோர்வு மற்றும் தூக்கமின்மை விபத்துக்களுக்கு காரணமாக அமைவதால், அது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தூய்மையான உணவுகளை மாத்திரமேஉட்கொள்வதுடன் முடிந்தவரை கொதித்தாறிய நீரைப் பருக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள், திருவிழாக் காலத்தில் விசேட உணவு வகைகளை உட்கொண்டாலும் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வழமையாக பண்டிகைக் காலத்தின் பின்னர் இவ்வாறான நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வீதம் அதிகரிப்பதாக சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

