
100 அடி பள்ளத்தில் விழுந்து லொறி விபத்து
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கடந்த (25) ஆம் திகதி, லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி ஆழமான பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற குறித்த லொறி, பிரதான வீதியிலிருந்து விலகி தேயிலைத் தோட்டப் பகுதிக்குள் விழுந்ததில் வாகனம் இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்தில் லொறியில் இருந்தவர்கள் காயமடைந்த நிலையில், லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், லொறி சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

