
59ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
59ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் தொடங்கிய இந்த மாபெரும் கலாசார விழாவில், விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எமது கலாசாரத்தின் முக்கிய அங்கமாக விவசாயம் பின்னிப்பிணைந்துள்ளதாக தெரிவித்தார்.
புத்தரிசி விழா அதன் உச்சகட்ட பலனாக விளங்குகின்றது என்றும், நாட்டின் அடையாளமும் கலாசார பாரம்பரியமும் இதன் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது முக்கிய இலக்கு என வலியுறுத்திய ஜனாதிபதி, அதனை அடைய வலுவான தொலைநோக்குப் பார்வையும் திட்டமிட்ட வேலைத்திட்டங்களும் அவசியம் என தெரிவித்தார்.
அத்துடன், விவசாயிகளின் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக தெளிவான உரிமை உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

