
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பக்கம் 72 இன் பிரகாரம் 20000 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்த்தல், தகவல் தொழிநுட்ப துறையில் 3000 STEM பட்டதாரிகள் மற்றும் 9000 STEM அல்லாத பட்டதாரிகளை உள்ளீர்த்தல், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, சுங்கத் திணைக்களத்திற்கு, வெளிநாட்டுச் சேவைக்கு, சுற்றுலா கைத்தொழிற்றுறைக்கு மேலும் 3000 பேரை உள்ளீர்ப்போம் என வாக்குறுதியளித்திருந்தனர்.
இவ்வாறு கூறியவாறு தொழில் கிடைக்காத காரணத்தினால் நேற்றும் இன்றும் பட்டதாரிகள் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் தொழில் பிரச்சினை தொடர்பில் இன்று (18) பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுனில் ஹதுன்னெத்தி கூறியது போலவும், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடியும், தொழில் வழங்கும் தினம் குறித்த குறிப்பிட்ட கால அட்டவணையை வழங்க முடியுமாக இருந்தால், பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க முடியுமாக இருந்தால் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டனர்.
2025 வேலையில்லாப் பட்டதாரிகளின் பொற்காலம் என்று தற்போதைய ஆளுந்தரப்பினரால் இதற்கு முன்னர் பிரஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் இதற்கான ஏற்பாடுகள் எதனையும் இதுவரையில் காணக் கூடியதாக இல்லை. தொழில் வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சரியான காலப் பிரிவு மற்றும் வேலைத்திட்டத்தை வெளிப்படுத்தும்படி எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.