
ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ இன்று விசாரணைக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், கடந்த 27ஆம் திகதி FCID-இல் முன்னிலையாகுமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றைய தினம் முன்னிலையாக முடியாத காரணத்தால், இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு அவர் தனது சட்டத்தரணி ஊடாக கோரியிருந்தார். இருப்பினும், இன்றைய தினமே மீண்டும் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் CID-இல் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருந்த காரணத்தால் பிறிதொரு திகதியை வழங்குமாறு அவர் கோரியிருந்ததாகவும், அதற்கமையவே இன்றைய தினத்துக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

